லஞ்ச வழக்கு: வைகுண்ட ராஜனுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை

லஞ்ச வழக்கு: வைகுண்ட ராஜனுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை

2 mins read
8c702df2-3e2a-4155-a156-8e3c9f7b389e
மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவைகுண்ட ராஜன். படம்: ஊடகம் -

மணல் அள்ளுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற மத்திய அரசு அதிகாரிக்கு ரூ.4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்ட ராஜனுக்கு மூன்றாண்டு கள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்கவும் வைகுண்ட ராஜன் தரப்பில் கோரியதை அடுத்து, நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.

திருநெல்வேலி, ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வைகுண்ட ராஜன் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குநர் நீரஜ் கட்டாரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்தது தொடர்பில் 2016ல் வழக்குப் பதிவானது.

இதையடுத்து, லஞ்சம் வாங்கிய நீரஜ் கட்டாரி, லஞ்சம் கொடுத்த வைகுண்ட ராஜன், லஞ்சம் கொடுக்க உதவிய வி.வி.மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தண்டனை விவரங்களை பிப்ரவரி 22ஆம் தேதி வழங்குவதாக தெரி விக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வைகுண்ட ராஜனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் அரசு அதிகாரி நீரஜ் கட்டாரிக்கு ஐந்தாண்டு சிறை, ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

வைகுண்ட ராஜனின் அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமிக்கு இரண்டாண்டு சிறையும் இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா உத்தர விட்டார்.