மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழ.கருப்பையா இன்று மநீம கட்சியில் இணைந்துள்ளார். வெற்றி வேட்பாளராக மநீம சார்பில் தேர்தலிலும் அவர் போட்டியிடவுள்ளார்.
“சட்ட பஞ்சாயத்து இயக்கமும் மநீமவுடன் இணைந்து தேர்தல் களம் காணவுள்ளது. மநீம சார்பில் போட்டியிட ஏராளமான விருப்பமனுக்கள் குவிந்துள்ளன.
“தகுதியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எனது தலைமையிலான தேர்வுக்குழு மார்ச் 1ஆம் தேதி நேர்காணலில் ஈடுபடும். மார்ச் 3ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் துவங்கவுள்ளேன்.
“மார்ச் 7ஆம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 3% வாக்குகளை வைத்து மூன்றாவது அணியை அமைப்பது வெற்றிக்கு வழிவகுக்குமா என்று கேட்டால் நீங்கள் சொல்வது சரித்திரம், நான் சொல்வது மாற்றம் என்று நான் கூறுவேன். சரித்திரம் நிகழ்ந்துவிட்டது, மாற்றம் நிகழப்போகிறது. யாருடனும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். எங்கள் தலைமையிலான கூட்டணியில் நான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எந்தக் கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. எங்களின் கதவு திறந்துள்ளது. வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்,” என்றார் கமல்.