புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டியைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் அனுராதா வளர்த்து வந்த புகழ்பெற்ற ராவணன் என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை உயிரிழந்துவிட்டது.
மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ராவணன், பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்று பரிசுகளைப் பெற்றது.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ராவணன், வீரர்களை திணறடித்து பிடிபடாமல் ஓடியது.
அப்போதிருந்தே அந்த ஜல்லிக்கட்டுக் காளையை காணவில்லை. அனுராதாவும் அவரது சகோதரர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் ராவணனைத் தேடிவந்தனர்.
தச்சன்குறிச்சி அருகே காளை நிற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மாரிமுத்து அங்கு சென்றபோது காட்டுப் பகுதியில் பாம்பு புற்று ஒன்றின் அருகில் ராவணன் காளை இறந்த நிலையில் கிடந்தது.
பாம்பு கொத்தியதால் அது இறந்ததாகத் தெரிய வந்தது.
பாம்பு கடித்த உடனே ஆத்திரத்தில் பாம்புப் புற்றை அந்தக் காளை முட்டி மோதி சேதப்படுத்தியதை காண முடிந்தது.
உடலில் விஷம் ஏறியதால் புற்று அருகிலேயே அது இறந்துவிட்டது.
ராவணன் சடலத்தை அதன் உரிமையாளர்கள் லாரியில் ஏற்றி ஊர்வலமாக தங்கள் சொந்த ஊரான நெம்மேலி பட்டிக்குக் கொண்டு சென்றனர்.
மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அது அடக்கம் செய்யப்பட்டது.