சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 702 பறக்கும் படையினர் தயாராகி வரு வதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்காக பணத்தை வாரி இறைக்கும் போக்கு தென்படுகிறது.
வாக்காளர்களும் எந்தக் கட்சி யினர் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கே வாக்களிப்பதாகக் கூறி பணத்தைப் பெறுகின்றனர்.
பெரும்பாலும் யார் அதிக அளவில் பணத்தைக் கொடுக்கிறார் களோ அவர்களுக்கே வாக்களித்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பணம் ஒருவரின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, காணொளி கண்காணிப்பு, பார்வையிடும் குழு, கணக்கீட்டுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
"வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவை ஒரு தொகுதிக்கு மூன்று குழுக்கள் என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா மூன்று பறக்கும் படைகள் என மொத்தம் 702 பறக்கும் படையினர் தயாராகி வருகின்றனர். மற்ற குழுக்கள் ஒரு தொகுதிக்கு ஒன்று என்றளவில் அமைக்கப்பட்டு உள்ளன," என்றார்.