சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.
அதிமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஆரம்பம் முதலே தேமுதிக அதிருப்தியில் இருந்து வந்தது.
அதிமுக முதன்முதலில் பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தை நடத்தி அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது.
இது தேமுதிகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் பாமகவுக்கு பிறகுதான் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது.
ஆரம்பத்தில் 41 தொகுதிகளை தேமுதிக கேட்டது. ஆனால், அதிமுக தரப்பில் 28 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டது. 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைத்தபோது தேமுதிக செல்லவில்லை.
அதனால் அதிமுக 28 தொகுதிகள் என்பதை வெகுவாக குறைத்தது. இந்த நேரத்தில் தேமுதிக 25 தொகுதிகள் கேட்டது. ஆனால், அதிமுக தேமுதிகவை அதிர்ச்சியடைய செய்யும் வகையில், 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று தடாலடியாக கூறியது.
இதனால், சற்று யோசித்த தேமுதிக, பாமகவுக்கு வழங்கியதுபோல 23 தொகுதிகளையாவது தாருங்கள் என்று அதிமுகவிடம் கேட்டது.
ஆனால், அதிமு.க தரப்பிலோ 13 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து நேற்று மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகு வதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒத்த கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றுதான் தீபாவளி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து தோல்வியை தழுவும்," என்றார்.
2011 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இடங் களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தகுதிக்கு உயர்ந்து 7.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் 3வது அணியான மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று படுதோல் வியைத்தழுவியது. ஓர் இடத்தில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.

