சென்னை: மக்களின் மனம் நிறைவு பெறும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்து அதிமுக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆட்சிமன்றக் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ேபசிய எடப்பாடி பழனிசாமி, மக்களின் மனம் நிறைவு பெறும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார்.
"அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் பல்வேறு திட்டங்கள் மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும். அதில் மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும்.
"சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்பத் தலைவியிடம் வழங்கப்படும்.
"மேலும் பல அறிவிப்புகள் விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்," என்று அவர் தெரிவித்தார்.
"அதிமுக கூட்டணி மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுள்ளது. கடந்த 4½ ஆண்டுகாலமாக நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
"2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை அதிமுக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால்தான் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றிபெற்றோம்.
"மக்கள் மீண்டும் அதிமுக அரசுதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதை இடைத்தேர்தல்கள் மூலமே மக்கள் எங்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார்கள்," என்று முதல்வர் பழனி சாமி கூறினார்.

