சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்: * முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதிய வேலைவாய்ப்புத் திட்டம், * பன்னிரண்டாம் வகுப்பு படித்து சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்க்கு உணவு, உறைவிடம் வழங்கி 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.
* புதிதாக தொழில் முதலீடு செய்ய முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.
* பணமதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 விழுக்காட்டை தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக சட்டமன்ற மேலவையை நியாயமற்ற காரணங்களைக் கூறி, கடந்த காலத்தில் கலைக்கப்பட்டது. ஜனநாயகத்தில் சட்டப்பேரவையும், மேலவையும் இரு கண்களாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், விவாதங்கள் செழுமை பெற மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
* தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். * தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள். * காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைமேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5% ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
* இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். * முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும். * மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவற்றை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

