திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சியால் ஆபத்து நேர்ந்தபோது, அதனை தடுத்து நிறுத்தி கோயிலை தமிழர்களிடம் மீட்டுத் தந்தவர் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி என தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர், அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அப்போது அவர் பேசும்போது, "அண்ணாமலையார் கோயில் முன்பாக வாக்கு சேகரிப்புப் பணியைத் தொடங்கி உள்ளேன்.
"அண்ணாமலையார் கோயிலுக்கும் திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. ஆன்மிகம் நிறைந்த கோயிலுக்கு பாஜக ஆட்சியில் ஆபத்து வந்தது.
"இந்த கோயிலை மத்திய தொல்லியியல் துறை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
"நாம் நினைக்கும் ஆட்சி புதுடெல்லியில் அமைந்துவிட்டால், அண்ணாமலையார் கோயில் மீட்டெடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, புதுடெல்லியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில், அண்ணாமலையார் கோயிலை மீட்டு, தமிழர்களிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.
"அண்ணாமலையார் கோயில் வேண்டாம் என தெரிவித்த பாஜக, திருவண்ணாமலையில் தற்போது போட்டியிடுகிறது.
"நம் மண்ணுக்கும் பாஜகவுக்கும் ஒருபோதும் ஒத்துவராது. எந்தக் காலத்திலும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கட்சி பாஜக," என்றார்.
7 பேர் வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட ஏழு திமுகவினர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

