சென்னை: தீமையையும் துரோகத்தையும் வென்று, மாநில மக்களைக் காக்கவே சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கைகோத்து போட்டியிடுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆேலாசித்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியவர், "தீய சக்தியான திமுகவையும் துரோகக் கட்சியான அதிமுகவையும் வீழ்த்துவதுதான் எங்கள் கூட்டணியின் முக்கிய இலக்கு," என்றார்.
"எங்களது கூட்டணி கட்சித் தலைமையால் அமைக்கப்பட்டது என்பதைவிடவும் தொண்டர்களால் உருவானது என்றே சொல்லலாம்.
"இலவசங்களை வழங்கி மக்களை ஏமாற்றி மோசம் செய்து வரும் கட்சிகளைத் தொடர்ந்து ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதற்காகவே கூட்டணி சேர்ந்துள்ளோம்," என்றார் தினகரன்.
தொடர்ந்து பேசியவர், "ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள் இருக்கும்.
"கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கையுடன் இருக்கமுடியாது. ஆனால், திமுக, அதிமுகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
"நல்லதொரு ஆட்சியை ஊழலற்ற, வெளிப்படையான, மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சியைத் தருவதுதான் எங்கள் கூட்டணி," என்றார்.
சசிகலாவின் ஆதரவு உங்களது கூட்டணிக்கு இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், சசிகலாவின் மானசீக ஆதரவு எங்கள் கூட்டணிக்குத்தான் உண்டு என்றும் கூறினார்.
இத்தேர்தலில் மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே மூன்றாவது அணியில் முந்தப் போவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

