சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. முதல் நாளன்று 59 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னர் வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய தலைவர்களும் வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் மட்டும் 964 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று மாலை 3 மணியுடன் அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. இதுவரை தாக்கலான மனுக்களின் எண்ணிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக கரூர் பேரவைத் தொகுதியில் 43 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகரில் 24 மனுக்களும் காங்கேயம் தொகுதியில் 22 மனுக்களும் தாக்கலாகி உள்ளன.
மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள். அன்று மாலை ஐந்து மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

