புதுடெல்லி: இலங்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்புக்கு வருகிறது.
தங்கள் நாட்டுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், "இலங்கையில், குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இருந்ததை, இருப்பதை அந்த நாடு மறுத்து வருவது வேதனைக்குரியது.
"அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா நிச்சயம் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு மனித உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, இந்தியா அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்," என ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

