சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி, மக்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் மணல் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை வாயிலாக குவாரிகளில் இருந்து மணல் விற்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆறு இடங்களில் மட்டுமே இணையத்தில் பதிவு செய்வதன்மூலம் ஆற்று மணல் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பொதுமக்கள் தனியாகவும் லாரி உரிமையாளர்கள் தனியாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இணையம் வழியான முன்பதிவில் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்க வேண்டும்; அதன் பின் லாரி உரிமையாளர்களுக்கு மணல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல கூட்டமைப்பின் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: இணையம் மணல் விற்பனையில், லாரி உரிமையாளர்கள் பெயரில் கடத்தல்காரர்களுக்கே மணல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களின் எண்ணிக்கை 55,000ல் இருந்து 15,000 ஆக குறைந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அனைத்து ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றி மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திரு பன்னீர்செல்வம் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டார்.

