காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டிக் களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூரில் சனிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அதிமுக எதிர்த்து குரல்கொடுக்கும் என்று இப்போது திடீரென ஞான உதயம் வந்ததுபோல தேர்தல் வந்த காரணத்தால் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ஓர் அறிவிப்பை அதிமுகவினர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இதே முதலமைச்சர் பழனிசாமி இந்த சட்டம் வந்த உடன் ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது என்று கூறி தனக்குத்தான் விவசாயம் தெரியும் என தெரிவித்தார்.
அவர் (முதலமைச்சர் பழனிசாமி) தற்போது எங்கு சென்றாலும் தான் ஒரு விவசாயி, தான் ஒரு விவசாயி என தொடர்ந்து கூறிவருகிறார்.
தன்னை ஒரு விவசாயி என அடையாளம் காட்டிக்கொண்டு அதுமட்டுமல்லாமல் போராடுகிற விவசாயிகளைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசினார்.
120 நாட்களைத் தாண்டி இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி போராடிவரும் விவசாயிகளைப் பார்த்து அவர்கள் எல்லாரும் தரகர்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

