கோவை: கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மண், மொழி, மக்கள் காக்க என்ற பெயரில் தேர்தல் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார்.
"மக்கள் பிரச்சினையை சட்டமன்றம் மட்டுமின்றி ஐ.நா.சபை வரை பேச வேண்டும் என்றாலும் பேசுவேன். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டும் நான் மக்களின் பிரதிநிதி கிடையாது.
"உண்மையாகவே நான் மக்கள் பிரதிநிதிதான். மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் இங்கு எதுவும் செய்யவில்லை. மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறுவது, மக்களின் உரிமை. சினிமாவை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். காவியாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும் சரி எந்த நிறமும் என் மீது ஒட்டாது.
"என் மீது எந்தச் சாயமும் பூச முயற்சிசெய்ய வேண்டாம். குற்றவாளிகளை ஒருமையில்தான் பேசுவேன். அந்த அவமானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்," என்று கமல் பேசினார்.

