சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுகள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொந்தகையில் வாய்ப் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.
அகரத்தில் ஒரு குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்ட போது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய மண் பானை ஓடுகள் கிடைத்தன.
தொடர்ந்து குழியை ஆழமாகத் தோண்டியபோது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் களிமண் கலன் ஒன்று நேற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தக் கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.
முந்தைய காலங்களில் களிமண்ணால் வட்ட உறை ஆக செய்து வீடுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பூசி இருக்கிறார்கள்.
இந்த கலன்களில் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து மக்கள் பயன்படுத்தி இருப்பதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

