தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவில்களில் பிரசாதம் கொடுப்பதோ அர்ச்சனை செய்வதோ கூடாது என இந்து அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பக்தர்களும் கோவில் ஊழியர்களும் முகக்கவசம் அணியவேண்டும். கோவில் வளாகங்களில் கிருமிநாசினியைக் கொண்டு கையைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
கோவில்களுக்கு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வருவதை தவிர்க்கவும். கோவில்களில் தேங்காய், பூ, பழம் கொண்டு அர்ச்சனை செய்வது, பக்தர்களுக்கு பிரசாதம், துளசி நீர் தருவது உள்ளிட்டவற்றைத் தவிர்க்கும்படியும் அறநிலையத்துறை கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நேற்று மேலும் 17 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இக்கிருமிப் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 185ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 12 பேருக்கு இப்பாதிப்பு உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக இந்த கிருமி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,289 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானது. அடுத்த சில நாள்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில், பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தது போல கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது.

