தஞ்சை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு அமோகமாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அமைச்சர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அவர் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார் கமல்ஹாசன். பின்னர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அப்போது தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தனர்.
இதையடுத்து துணை ராணுவப் படையினரும் போலிசாரும் வாகனத்தை சோதனையிட்டனர். இதில் பணம் உள்ளிட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து அவரது வாகனம் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மேலும் ஒருமுறை கமல்ஹாசனின் வாகனம் சோதனையிடப்பட்டது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக நாகையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர் பணத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
"எங்கள் ஆட்சியில் அமைச்சர்கள் கொள்ளையடித்தால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கைவிலங்கு போடப்படும். கஜா புயலின்போது நான் சீர்குலைந்து கிடந்த இடங்களுக்கு எல்லாம் நடந்து வந்தேன். மக்கள் எங்களை வரவேற்றார்கள்.
"அப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஹெலிகாப்டரில் வந்தார்கள். அவர்களை அடித்து விரட்டினார்கள். ஆனால் நாங்கள் இப்போது ஹெலிகாப்டரில் வந்தாலும் மக்கள் எங்களை வரவேற்கிறார்கள்," என்றார் கமல்ஹாசன்.
தமிழக மக்கள் தங்களது எதிர்கால சந்ததிகளைப் பற்றி யோசித்து நேர்மையான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மக்கள் ஆதரவு அளித்தால்தான் தம்மால் தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலும் என்றார்.
மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை அதன் உறுப்பினர்களுக்கு அரசியல் என்பது தொழில் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அரசியல் ஈடுபாட்டை ஒரு கடமையாக கருதுவதாக தெரிவித்தார்.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'சேவை பெறும் உரிமை' என்ற புதுச்சட்டம் கொண்டு வரப்படும். சேவை பெறும் உரிமை உங்களுடையது. அதை வழங்கும் முதல் கட்சி மக்கள் நீதி மய்யம்.
"ஊழல் செய்பவர்களை தைரியமாக நீக்குவதற்கும் தண்டிப்பதற்குமான எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம்," என்றார் கமல்ஹாசன்.
தமது பிரசாரத்தின்போது அவர் திமுகவையும் அதிமுகவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

