10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தம்
புதுடெல்லி: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நேற்று தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது நோய் தடுப்புப் பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்தும் தொற்றுப்பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே பீகார் மாநிலத்தில் தேர்தலையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தமிழகத்திலும் அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர், சேலம், மதுரை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் இதுவரை 2.1 மில்லியன் பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தஞ்சையில் மேலும் ஐந்து கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 180 பள்ளி மாணவர்கள், 13 கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

