சென்னை: ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இம்முறை தேசிய கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இம்முறை இத்தொகுதியில் 12 பேர் களம் காண்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தொகுதி எம்பி வசந்தகுமார் மரணம் அடைந்ததை அடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி ஏற்கெனவே இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்குகிறார்.
இத்தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி 12 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், காங்கிரஸ், பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
அதேசமயம் மாநிலக் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களைக் களமிறக்கி இருப்பதால் தேசிய கட்சிகள் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

