மயிலாடுதுறை: தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, முதன்முறையாகத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
தி.மு.க, அ.தி.மு.க அணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாகக் களமிறங்கும் ம.நீ.ம-வுக்காகத் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்த கமல் பேசுகையில், "நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்துள்ளதால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
"ஆனால், அதைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. மக்களின் நலன் ஒன்றை மட்டுமே மனத்தில் கொண்டு அரசியலுக்கு வந்துள்ளேன்," என்றார்.

