சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன.
ஆளும் அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. இதை செய்ய முடியுமா? என்ற விமர்சனங்களும்; தங்கள் வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் பரப்புரையில் வைக்கப்படுகின்றன.
இதுதவிர, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன.
இது மட்டுமல்ல, கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளே நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அள்ளிவிட்டுள்ள வாக்குறுதிகள், அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளன.
மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 35 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அனைவரையும் அசரவைக்கும் வாக்குறுதிகளில் சில...
* தொகுதி மக்கள் அனைவருக்கும் 'ஐஃபோன்' வழங்கப்படும்.
* உலக வெப்பமயம் ஆவதால் தொகுதி சில்லென இருக்க 300 அடி உயர செயற்கைப் பனிமலை உருவாக்கப்படும்.
* விடுமுறை நாளில் மக்கள் பொழுதுபோக்க செயற்கைக் கடல் உருவாக்கப்படும்.
* தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் சுற்றுலாப் பயணமாக 100 நாட்கள் நிலவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
* தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.
* இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம்.
* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கால்வாய்கள் வெட்டப்படும். இதில் பயணம் செய்ய வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும்.
இப்படி வாக்குறுதிகள் தொடர்கின்றன. கற்பனைக்குக் கூட எட்டாத இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
என்றாலும் இந்தக் கற்பனைத் திலகம் மாறுபட்ட வாக்குறுதிகளை அளித்து அனைவரையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்து விட்டார்.
தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யலாம் என்று எல்லை மீறி வாக்குறுதிகளை அளித்து வருகின்றன அரசியல் கட்சிகள்.
அந்தக் கட்சிகளின் வாக்குறுதிகளை மறைமுகமாகக் கிண்டல் செய்யவே இவர் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

