கும்மிடிப்பூண்டி: உடல்நிலை சரி யில்லாத நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் நின்றபடி கையை மட்டும் அசைத்து வாக்கு சேகரித்தார். அவரால் எதுவும் பேசமுடியாத நிலையில், மௌனமாக கடந்து சென்ற விஜயகாந்தை பார்த்து அவரது தொண்டர்கள் 'கேப்டன்... கேப்டன்...' என உருக்கமாக அழைத்து முழக்கமிட்டனர்.
விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, பொன்னேரியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பொன்ராஜா ஆகியோரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் செய்தார்.
விஜயகாந்தைக் காண ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே குவிந்திருந்தனர்.
மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது வேன். அவருடன் இருந்த உதவியாளர்கள் அவருக்கு உதவினர். எதுவும் பேசாமல் மௌனமாக கடந்த விஜயகாந்தின் நிலையைக் கண்டு, வருத்தமடைந்த தொண்டர்கள் அவரை அன்போடு வழியனுப்பினர்.
இதற்கிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா கொரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு தொற்றில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

