சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா கிருமிப் பரவல் கணிசமாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தேர்தல் முடிந்தபின்னர் இந்த ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவர வாய்ப்புகள் உள்ளதாகவும் அப்போதுதான் கிருமிப் பரவலை முறியடிக்கமுடியும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா கிருமிப் பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அந்தந்த மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநில அரசுகள் சுயமாக முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்த கிருமிப் பரவல் எண்ணிக்கையைவிட தற்போது இந்த எண்ணிக்கையானது இரு மடங்கு அதிகமாகி உள்ளது.

