திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராகவும் இவர் போட்டியிடுகிறார்.
அவருக்குச் சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை, பெட்ரோல் நிலையம், குடிதண்ணீர் தொழிற்சாலை, கிரானைட் தொழிற்சாலை, கூடலுார் கிராமத்திலுள்ள எ.வ.வேலுவின் பூர்வீக வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு உள்ளிட்ட 18 இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 3.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டதால் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.
நேற்றுமுன்தினம் தொடங்கிய சோதனை இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்நிலையில், தேர்தலுக்கும் இந்தச் சோதனை நடவடிக்கை களுக்கும் தொடர்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுகிறது.
"இந்த சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்," என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

