சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒன்பது நாள் களில் நடைபெற உள்ளது.
இச்சூழலில், வாக்காளர்களிடம் பணத்தைக் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றிபெறத் துணியும் வேட்பாளர்களை எச்சரிக்கும் விதத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோத னைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனைகள் மூலம் ரூ.55 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது நடந்து வரும் அதிமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைவதால், இங்குள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்தலின் பொருட்டு 250 அதிகாரிகள் கொண்ட சிறப்புப் படையினரும் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் கைகோத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனைகளில் இறங்கி உள்ளனர்.
வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனைகளை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில் அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை நடத்தினர்.
உதயகுமாருக்குச் சொந்தமான தனியார் கல்லூரி இலுப்பூர் அருகே செயல்பட்டு வருகிறது. அதில், விராலிமலையைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் நள்ளிரவு வரை நடந்த சோதனையில் ரூ.50 லட்சம் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான கரூரில் உள்ள நிறுவனங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், "திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன," என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"திருவண்ணாமலை தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தியிருப்பது உள்நோக்கம் கொண்டது. அவருடைய பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காக பாஜக இச்செயலை செய்கிறது. வெளிப்படையான, சமமான விளையாட்டுத் தளம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தவேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

