புதுச்சேரி: புதுச்சேரியின் மங்கலம் தொகுதியில் அமமுக கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள முரளிதரன், அண்மையில்தான் திருமணம் முடித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி போட்டியிடுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் முரளி தரன், "நான் சமூக சேவைகளிலும் அரசியலிலும் அதிகமாக ஈடுபட்டு வந்ததால் பலரும் எனக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.
"45 வயதாகிவிட்ட நிலையில் கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு பிரசாரம், வாக்குச் சேகரிப்பு என தேர்தல் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறேன்.
"இதனால், என் மனைவியுடன் நான் இன்னும் சரியாகக் கூட பேசவில்லை," எனக் கூறும் அவர், "தேனிலவுக்கும் செல்லாமல் தேர்தல் பிரசாரத்தை தொடர்கிறேன்," என்கிறார்.
"மக்களுக்காக நீண்ட நாட்களாகச் சேவையாற்றி வருகிறேன். நான் வெற்றிபெற்றால் புதுச்சேரியின் முதன்மை தொகுதியாக வில்லியனூரை மாற்றுவேன். இளைஞர்களுக்கு முறையாக நேரடி நியமனம் மூலம் அரசுத் துறையில் காலியாக உள்ள 9,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பேன். தொகுதிதோறும் அனைத்து கிராமங்களிலும் அலுவலகம் அமைத்து மக்களை நேரில் சந்திப்பேன்.
"சிறுவர்கள்- இளைஞர்கள்- முதியவர்கள் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்," என்று தனது வாக்குறுதிகளை அறிக்கையாகவும் வெளியிட்டு உள்ளவர், அதில் தனது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
நான் வெற்றி பெற்றால், மக்கள் என்னைத் தேடி வரும் தேவை இருக்காது. நானே அவர்களைத் தேடிச்சென்று சேவையாற்றுவேன்.
சின்ன வயது முதலே எனக்கு அரசியலை விட்டால் வேறொன்றும் தெரியாது.
அமமுக வேட்பாளர் முரளிதரன்

