திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொருமியிருக்கிறார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நடந்து வருகிறது.
கடந்த வாரம் ராகுல் காந்தி கொச்சியில் செயின்ட் தெரேசா கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்று தான் பயின்ற அய்கிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார்.
இதைச் சுட்டிக்காட்டியுள்ள இடுக்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ், "ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார்," என்று கூறியுள்ளார்.
"பெண்களுக்குத் தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி நேராக நில்லுங்கள், குனிந்து, வளைந்து நில்லுங்கள் என்று பெண்கள் அருகே ராகுல் செல்கிறார்.
"பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது. இதுபோன்றும் செய்யக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர்," என்றார்.
இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பதில் அளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இது இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கருத்து அல்ல என்று கூறியுள்ளார்.

