சென்னை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனுடனான நட்பை முறித்துக்கொண்ட நடிகை கௌதமி, அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் நடிகை கௌதமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் கமல்ஹாசனைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கமல்ஹாசனைப் பிரிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அது முடிந்துபோன கதை. அது பற்றி இனி பேசவேண்டாம்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக பாஜக மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே இக்கட்சியில் இணைந்தேன்.
மக்கள் நீதி மய்யம் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்.
ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும்போது இதுபோன்று மாற்றங்களைக் கொண்டு வருவோம் என கூறுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற வியாபாரத் தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது.
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் பிரியுமா? என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அப்படி பிரிந்தால் அது அதிமுக - பாஜக கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கௌதமி கூறினார்.