சென்னை: காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளான ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் நாட்டியம் ஆடும் படத்தைப் பயன்படுத்தி தாமரை மலரட்டும் என்று குறிப்பிட்டு பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் செயல் முற்றிலும் ஏற்புடையதல்ல என கூறிய ஸ்ரீநிதி, தமிழகத்தில் தாமரை என்றுமே மலராது என தமிழில் டுவிட் செய்துள்ளார்.
செம்மொழி மாநாடு நடந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுத்தில் உருவான செம்மொழியாம் தமிழ்மொழி பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் பாடலில் ஒரு காட்சியில் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்திக் நடனமாடியிருப்பார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் காட்சி அடங்கிய காணொளிப் பதிவுடன் தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் 'தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே' என்று பதிவிட்டிருந்தது.

