கீழடி: கீழடியில் மீண்டும் 2,600 ஆண்டுகள் பழமையான மண்பானைகள், கிண்ணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 7வது கட்ட அகழ்வாராய்ச்சி அங்கு நடைபெற்று வருகிறது.
மதுரை அருகே உள்ள கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் ஏற்கெனவே ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடம் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றன. இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பொருட்களை ஆய்வு செய்யும்போது 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிய வந்துள்ளது. தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன.
முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரம் பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் ஒரு குழியில் மணிகள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழி, மண் கிண்ணங்கள், அகரத்தில் சேதமான பானை, தானியங்கள் சேகரித்து வைக்கும் தாழி ஆகி யவை கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் கீழடியில் 2வது குழி தோண்டப்பட்டு வந்தது. இந்தக்குழியில் சுமார் 9 அடி ஆழத்தில் தோண்டும்போது சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், சிறிய மண் கிண்ணங்கள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் கிடைத்துள்ளன. மேலும் சேதமடைந்த நிலையில் அதிக மண்பாண்ட ஓடுகளும் கிடைத்து உள்ளன.
பழங்கால வெள்ளை பாசி கிடைத்ததால் சிறிய பொருட்கள் மேலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

