சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள ஒட்டுமொத்த கடைகளையும் ஒரே நாளில் திறக்காமல் பகுதி பகுதியாக சுழற்சிமுறையில் திறப்பதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோயம்பேட்டில் மொத்தமுள்ள 1,800 கடைகளில் ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் திறக்கப்பட உள்ளன.
இதேபோல், இரட்டைப்படை எண்களைக் கொண்ட கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் திறக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்ெவாரு நாளும் உக்கிரமடைந்து வரும் கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதன்படி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறை யாகப் பின்பற்றாதவர்களுக்கு ஆங்காங்கே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டமாக பொழுதுபோக்கும் கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப் பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10ஆம் தேதிமுதல் தற்காலிகமாக மூடப்படும் என அரசு கடந்த வியாழனன்று அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கோயம்பேடு சந்தை சில்லறை வியாபாரிகள், "சில்லறை விற்பனை கடைகளை முழுவதுமாக மூடுவதற்குப் பதிலாக 50% கடைகளைச் சுழற்சி முறையில் திறக்க அனுமதிக்கவேண்டும்," என்று கோரியிருந்தனர்.

