வாணியம்பாடி: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபீலின் உதவியாளர் பிரகாசம், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா, 30. முதுகலைப் பட்டதாரியான இவர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் அளித் துள்ள புகார் மனுவில், எனக்கு நண்பராக அறிமுகமான வாணியம்பாடியைச் சேர்ந்த பிரகாசம், தொழிலாளர் நலத்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும் அமைச்சர் நிலோபர் கபீலிடம் கூறி அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறினார்.
அதற்காக நான் ரூ.15 லட்சத்தை பிரகாசத்திடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை. கடனாக வாங்கிக் கொடுத்த ரூ.15 லட்சத்திற்கு வட்டி கட்ட முடியாமல் திணறிய நிலையில், பிரகாசத்திடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்ததால் 2019ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்து ஏழு லட்சத்தை திரும்பப் பெற்றேன். மீதி எட்டு லட்சத்தை ஒரு வருடம் கழித்து தருவதாகக் கூறினார். இன்னும் கொடுக்கவில்லை.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, ரூ.8 லட்சத்தைத் தரமுடியாது எனக் கூறி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார் என அந்த இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
போலிசாரின் விசாரணை தொடர்கிறது.