சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாள்களில் மட்டும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களிடம் இருந்து ரூ.2.78 கோடி அபராதத் தொகை வசூலாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையில் மட்டும்தான் அதிக அளவிலான மக்கள் கிருமித்ெதாற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது போலிசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் ரசீது புத்தகம் மூலம் சட்டம் ஒழுங்கு போலிசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பி னால் ரூ.500, தனிமைப்படுத்தப் படுவதை மீறினால் ரூ.500, தனி மனித இடைவெளியைக் கடைப் பிடிக்கத் தவறினால் ரூ.500, வழி காட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாத வணிக வளாகங்களுக்கு ரூ.5,000 என அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணி யாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் எண்ணிக்கை 1,30,531. அதன்மூலம் ரூ.2,52,34,900 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடந்த நான்கு நாள்களில் பதிவு செய்யப்பட்ட 6,465 வழக்குகள் மூலம் ரூ.25,90,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பில் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 10ஆம் தேதி வரை 16 லட்சத்து 37 ஆயிரத்து 245 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் ரூ.17 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.