சென்னை: அம்பேத்கர் வழியில் பொதுமக்களுக்கு திமுக கடமையாற்றும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமேதையான அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார்.
சட்ட வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக அவர் தன்னை நிரூபித்தார். 1990-ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. அவரது 130வது பிறந்த நாள் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.
அரசியல் கட்சித் தலைவர்களும் இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் அம்பேத்கரின் சமூக பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அம்பேத்கருக்கு திமுக சார்பில் எங்களின் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர். அவருடைய வழி நின்று திமுக தன் கடமையை உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றும்," என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமர், அதிபர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

