சென்னை: சென்னையில் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்று எழுதப்பட்டு இருப்பதற்கு ஸ்டாலின், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், "ஈ.வெ.ராமசாமியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு 'ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை' என 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார்.
"கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்தது.
"இந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் 'கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க்' ரோடு என எழுதப்பட்டிருப்பதும் நெடுஞ்சாலைத் துறை இணையத்தளத்தில் இவ்வாறே குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது," என்று தெரிவித்துள்ளார்.
"அதிமுகவின் காபந்து அரசாங்கத்துக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில் இந்த திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு தன் டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா அல்லது ஈ.வெ.ரா. பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா. எதுவாக இருந்தாலும் மீண்டும் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். தாமதம் செய்தால் மே 2க்குப் பின் அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்," என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ, "ஆர்எஸ்எஸ் சங்பரிவார் வகுத்த வியூகத்தின்படி டெல்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை பழனிசாமி நிறைவேற்றி இருக்கிறார். தமிழகத்தின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார். ஏற்கெனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து காமராஜர், அண்ணாதுரை பெயர் நீக்கப்பட்டதையும் பழனிசாமி அரசு கண்டுகொள்ளவில்லை," என்று சாடியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை 'கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு' என்று அழைக்கப்பட்டு வந்தது. 1979ல் ஈ.வெ.ரா நுாற்றாண்டு விழாவை ஒட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டது.
ஆனால் நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே உள்ளது. அதையே நெடுஞ்சாலைத் துறையினர் அண்மையில் வைத்த அறிவிப்புப் பலகைகளில் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

