உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நீதிபதி தனபால்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக நீதிபதி தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உத்தரவின்படி, சில மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி பி.தனபால் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு மழை
சென்னை: வளிமண்டல சுழற்சியால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இம்மாதம் 16ஆம் தேதி வரை, கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளம் முதல், தெற்கு கொங்கன் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மழை தொடரும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அதிகபட்சம் 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.
துரைமுருகன் குணமடைந்தார்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைமுருகன் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். இதற்கிடையே திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்ணகி கோயிலில்
கொடியேற்றம் இல்லை
கம்பம்: தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நடைபெறவிருந்த முழுநிலவு விழாவுக்கான கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இவ்வாண்டு குறைவான பக்தர்களின் எண்ணிக்கையுடன் தனிநபர் இடைவெளி யுடன் முழுநிலவு விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் மனு கொடுத்த னர். மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்காத நிலையில் கண்ணகி கோயில் கொடியேற்றத்துக்கு வந்த பக்தர்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் சித்திரை மாதம் பௌணர்மி அன்று முழுநிலவு விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டும் கிருமிப் பரவல் காரணமாக முழுநிலவு விழா ரத்து செய்யப்பட்டது.
விநாயகர் சிலை கண்டுபிடிப்பு
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் செம்பியமணக்குடி பகுதியில் உள்ள மணக்காட்டான் வாய்க்காலில் நேற்று ஆற்றில் சிலர் மீன்பிடித்தபோது வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கிடைத்தது. இதனை பறிமுதல் செய்துள்ள வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

