சென்னை: தமிழகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல் ஊரடங்கு போடுவதற்கான தேவை இன்னும் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் மாநிலம் முழுவதும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் கொரோனா தடுப்பூசியை மக்க ளுக்குப் போடும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாடெங்கும் இரண்டாம் கட்ட கொரோனா அலை உக்கிரம் அடைந்து வருகிறது.
"மகாராஷ்டிராவில் பொது முடக்கமும் மற்றும் பல மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
"இருப்பினும், பொதுமுடக்கம் போடக்கூடிய சூழல் இன்னும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை.
"கிருமிப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மாநிலத்தில் இத்தொற்றால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
"ஆக்சிஜன் வசதியும் மருத்துவ மனைகளில் போதுமான அளவில் உள்ளது.
"எனினும் அடுத்த இரு வாரங்கள் மிகவும் சவாலான காலகட்டம் என்பதால், மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
"மக்கள் அனைவரும் பொறுப்புடன் ஒத்துழைப்பை வழங்கினால்தான் இந்த தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
"தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்கவேண்டும்," என்பதே எங்கள் வேண்டுகோள் என்று கூறிய ராதாகிருஷ்ணன், கடந்த சில நாள்களாகவே நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கிருமி பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000ஐ நெருங்கிய நிலையில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத் தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

