சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவும் வேகம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும் இந்த கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் உறுதியாக கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு ஒன்றில் காணொளி மூலம் முன்னிலையான அவரிடம், கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
அப்போது, கடந்த ஆண்டை விட கிருமிப் பரவலின் தாக்கம் கைமீறிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், "தற்போது பெருந்தொற்று எப்படி பரவுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால்கூட அறுதியிட்டுக் கணிக்கமுடியவில்லை," என்றார்.
அத்துடன், தமிழகத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் 40 வயதானவர்களுக்கும் அவர்கள் விரும்பினால் இத்தடுப்பூசியைப் போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இப்போதைய சூழ்நிலையில், நீதிமன்றங்களில் பின்பற்றவேண்டிய தடுப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

