திண்டுக்கல்: வேடசந்தூரில் தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்து ஆசை காட்டி, பூஜை நடத்தி சொத்து முகவரிடம் ரூ.22 லட்சம் ரொக்கத்தையும் 45 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற போலி சோதிடரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரிய புத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல், 51. சொத்து முகவரான இவரிடம், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் கிராமத்தைச் சேர்ந்த சோதிடர் சசிகுமார், 51, அறிமுகமானார். அதன்பின், இவர் தான் ஒரு சோதிடர் அல்ல எனவும் பூஜைகள் மூலம் தங்கப் புதையல்களை எடுப்பவர் எனவும் புதுக் கதை கூறியுள்ளார்.
பூஜைகள் நடத்துவதாகக் கூறி தங்கவேலிடம் இருந்து ஒவ்வொரு முறையும் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் சசிக்குமார். இதற்கிடையே, தங்கவேல் மனைவி, மாமியாரிடமும் தனியாகப் பேசி 45 சவரன் நகைகளையும் வாங்கிக்கொண்டார் சசிகுமார். மேலும், புல்லட் பைக், ஒரு கார், கைபேசி ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டார். ஆனால், எந்த புதையலையும் தராமல் கம்பி நீட்டியவர், இப்போது கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்.

