வேளச்சேரி: வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் 548 ஆண்கள் மட்டும் மீண்டும் வாக்களித்துச் சென்றனர்.
வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த தினத்தில் இரவு நேரத்தில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, அரசியல் கட்சியினர் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவை பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று விளக்கம் அளித்த பின்னரும் அரசியல் கட்சியினரின் வலியுறுத்தியதால் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்கு ஏற்கெனவே 6ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்களிப்பின்போது இடது கை ஆள்காட்டி விரலில் கருப்பு மை வைக்கப்பட்டதால், நேற்று நடந்த மறு வாக்குப்பதிவின்போது வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

