சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு நிலவும் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பி உள்ளார். அதில், "தமிழ்நாட்டில் வெறும் 46.70 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 40.64 லட்சம் பேருக்கு முதல்முறையும் 6.05 லட்சம் பேருக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி மருந்து இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.
"மத்திய அரசிடமிருந்து 20 லட்சம் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு ஏற்கெனவே கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
"எனவே, தாங்கள் தலையிட்டு மாநில அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புவதுடன் தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றை அதிக அளவு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

