மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் இரட்டைபுளிய மரத்தூரைச் சேர்ந்தவர் பத்மராஜன், 63 (படம்). இவர் 1988ஆம் ஆண்டு முதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தேர்தலிலும் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், அதிபர் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக இதுவரை 218 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
இம்மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து அந்த மாநிலத்தில் உள்ள தர்மடம் தொகுதியிலும் பத்மராஜன் போட்டியிட்டார். அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்று குறிப்பிட்டு ஹரியானாவைச் சேர்ந்த 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்' அமைப்பு பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் அவரது பெயரை 2021 சாதனையாளர் பட்டியலிலும் அந்த அமைப்பு இடம்பெறச் செய்துள்ளது. உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம்பிடிப்பதே தமது லட்சியம் என்றும் அதுவரை எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாகவும் பத்மராஜன் கூறியுள்ளார்.

