வேளச்ேசரி: வேளச்சேரியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரியாணி கடை ஒன்று திறப்பு விழா அன்றே மூடப்பட்டு உள்ளது.
வேளச்சேரியில் 'தி வெட்டிங் பிரியாணி' என்ற பெயரில் கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டதை அடுத்து, திறப்பு விழா சலுகையாக பிரியாணியின் விலையில் 50% தள்ளுபடி வழங்குவதாக கடையின் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற அறிவிப்பையும் செய்திருந்தனர்.
இதைக் கேள்விப்பட்ட மக்கள் தனிமனித பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றாமல் பிரியாணி கடை முன்பு சாரை சாரையாகக் குவிந்தனர். அவர்களில் ஒரு சிலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மக்கள் கூட்டம் அதிகரித்ததால் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடும்படி அறிவுறுத்தினர்.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள், "தேர்தல் நேரத்தில் மட்டும் கிருமி பரவவில்லையா? அப்போதும்தான் வேட்பாளர்களைக் காண மக்கள் திரண்டனர். அப்போது பரவாத கொரோனா இப்போது மட்டும் பரவுமா?" என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். எனினும், சற்று நேரத்தில் அதிகாரிகள் அந்தக் கடையை மூடி, முத்திரை வைத்தனர்.

