ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்ததாக மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் 'ஐனாக்ஸ்' என்ற ஒரே ஓர் ஆலை மட்டுமே ஆக்சிஜனை சென்னைக்கும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விநியோகித்து வருகிறது.
இந்த நிலையில், அந்த ஆலை தயாரிக்கும் ஆக்சிஜனில் ஏறத்தாழ 45 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் அனுப்பும்படி மத்திய சுகாதார அமைச்சு உத்தரவிட்டு இருக்கிறது.
"தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொவிட்-19 தொற்று குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இதைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசாங்கம் அந்த உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.
"இந்த முடிவை தமிழ்நாட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக மத்திய அரசு எடுத்து இருக்கிறது.
"தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அந்த முடிவால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது," என்று தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் தெரிவித்தது.
"பக்கத்து மாநிலங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போது தமிழக நிலவரத்தைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். இப் பிரச்சினையை கூடியவிரைவில் மத்திய சுகாதார அமைச்சிடம் எழுப்புவோம்," என்றார் அமைச்சர்.
இதனிடையே, தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்பு உலையை இயக்க அனுமதிக்கும்படி வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 600,000 குப்பி கொவிஷீல்டு மருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததை அடுத்து கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசித் தட்டுப்பாடு மாநிலத்தில் இல்லை என்றும் தடுப்பூசிப் பணி இடையூறு இல்லாமல் தொடர்வதாகவும் அரசு அறிவித்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையன்று புதிதாக 10,986 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும் 48 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் நேற்று அதிகாரிகள் அறிவித்தனர்.
அவர்களையும் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 13,205 ஆகக் கூடியது. செவ்வாயன்று மொத்தம் 6,250 பேர் குணமடைந்தனர்.
சென்னையில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது. சென்னையில் செயல்படும் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஏப்ரல் 20 நிலவரப்படி, கால்வாசிப் படுக்கைகளே எஞ்சி இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்க மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.
ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஞாயிறுகளில் முழு ஊரடங்கு நடப்பில் இருக்கும்.
இரவு நேரத்தில் மாநிலத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடப்பதோடு பகலிலும் பேருந்துகளில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்பது தெரியவந்தது.
இப்போதைய இரண்டாவது அலையின் போது இளையர்கள், சிறார்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிகிறது.
ஏப்ரல் மாதத்தில் இதுநாள் வரை 12 வயது வரைப்பட்ட 4,212 சிறார்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் வரை இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 32,523 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சமயத் தலைவர்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் தமிழக அரசு அதிகமாக நாடி வருகிறது என்றும் ஒத்துழைக்க அவர்கள் இசைந்து இருப்பதாகவும் தகவல்கள் கூறின.

