ஈரோடு: தன் மருமகனும் மகளும் சேர்ந்துகொண்டு தனது பேரப்பிள்ளைகளை நரபலி கொடுக்க முயன்றதாகவும் அதை எதிர்த்து கேட்டபோது மருமகனும் மகளும் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாக்கியம் என்ற 60 வயது பாட்டி தன் கணவர், பேரப்பிள்ளைகளுடன் சென்று போலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.
திருமதி பாக்கியத்தின் மகளான ரஞ்சிதா, 36, என்பவர் ராமலிங்கம், 43, என்ற ஜவுளி வியாபாரியை மணந்துகொண்டு இருக்கிறார்.
இந்தத் தம்பதிக்கு 15 வயது, 6 வயது மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஞ்சிதாவின் சம்மதத்துடன் இந்துமதி, 32, என்ற மாதை ஆறு ஆண்டுகளுக்கு முன் ராமலிங்கம் திருமணம் செய்துகொண்டார்.
ஈரோடு அருகே வசித்து வந்த ராமலிங்கம் குடும்பத்தில் சசி என்ற மறுபெயருள்ள தனலட்சுமி, 39, என்ற மாதும் வாழ்ந்து வந்தார்.
ராமலிங்கம், ரஞ்சிதா, இந்துமதி, சசி நால்வரும் சேர்ந்து தனது இரண்டு பேரப்பிள்ளைகளையும் கொடுமைப்படுத்தி வந்ததாக போலிஸ் புகாரில் திருமதி பாக்கியம் தெரிவித்தார்.
அதோடு மட்டுமின்றி, ராமலிங்கத்தின் வீட்டில் சசி சிவனாகவும் ரஞ்சிதா சக்தியாகவும் வேடம் போட்டுக்கொண்டு பூஜைகள் நடத்தி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டு பேரன்களையும் பலிகொடுத்தால் சிவனுடைய சக்தி நேரடியாகக் கிடைக்கும் என்று ரஞ்சிதாவிடம் சசி கூறியதைக் காது கொடுத்து கேட்ட தன் பேரப்பிள்ளைகள் பயந்து தன் வீட்டுக்கு ஓடிவந்துவிட்டதாகவும் திருமதி பாக்கியம் புகாரில் தெரிவித்தார்.
இதை நேரடியாக கேட்டு விட வேண்டும் என்ற முடிவுடன் ராமலிங்கம் வீட்டிற்குச் சென்றபோது ராமலிங்கமும் ரஞ்சிதாவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த முதிய மாது போலிசில் தாக்கல் செய்த புகாரில் கூறினார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் ராமலிங்கம், ரஞ்சிதா, இந்துமதி, சசி ஆகிய நால்வருடன் அவர் களுக்குப் புகலிடம் கொடுத்ததாகக் கூறி மாரியப்பன், 42, என்ற ஆடவரையும் போலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவரங்களைத் தெரிவித்த தினகரன் நாளிதழ், போலிசார் எடுத்த நடவடிக்கைகளில் இரண்டு கார்களும் சிவன் சிலையும் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.

