சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடக்கிறது. மாநிலத்தில் கொவிட்-19 தொற்று அதிகமாகிவிட்டதால் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கூடி வருகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் நடைமுறைக்கு புதிய கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து இருக்கிறது. ஆகையால் அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க 24 மணி நேரம் போதாத நிலை ஏற்படலாமென நம்பப்படுகிறது.
வாக்கு எண்ணும் கூடம் குறைந்தபட்சம் 2,000 சதுரஅடி பரப்பளவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கூடத்திலும் 14 மேசைகள்தான் போடப்பட வேண்டும்.
ஒரு மேசைக்கு 250 சதுரஅடி இடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
இதனால் மாநிலத்தின் பல இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தாமதமடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவுகளை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைத்து வாக்கு எண்ணும் நடைமுறை பற்றி விருதுநகர் ஆட்சியர் விவாதித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக வாக்கு எண்ணிக்கைக் கூடம் ஒன்றை அமைப்பது பற்றி மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பல கட்சிகளையும் அணுகி கருத்து கேட்டனர். ஆனால் அதில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் பலதரப்பட்ட புகார்களை எழுப்பி வருகின்றன.
தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் திமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.
இவ்வேளையில், நாகை தெத்தி பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உயரே புகைப்பட சாதனத்துடன்கூடிய வானூர்தியைப் பறக்கவிட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பேர் மீது வழக்குப் பதியப் பட்டு இருக்கிறது.

