சென்னை: மாநிலம் முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றின் இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த தருணத்தில், இளைய வயதினரையும் பாதுகாக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் மாநில அரசு கூறியுள்ளதாக தினமணி ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
18 முதல் 45 வயது வரையுள்ள அனைத்து கட்டடத் தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அனைத்து சந்தைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்டோ ரும் மே 1ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 45 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 13 விழுக்காடும் 60 வயதுக்கு மேல் 18 விழுக்காடும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
18 முதல் 45 வயது வரை உள்ள வர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளதாக தமிழ் சமயம் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் 18-44 வயது மக்களுக்கு மே 1ஆம் தேதி முதல் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
"கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், இதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"இந்த நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படிப் பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்கவேண்டும். தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன் நிற்கும்," என்று பதிவிட்டுள்ளார்.

