சென்னை: தமிழகத்தில் அடுத்த மே மாதத்தில் கொவிட்-19 தொற் றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை மணியை மருத்துவ நிபுணர்கள் முன்கூட்டியே அடித்துள்ளனர்.
தமிழக அரசின் மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினரும் ஐசிஎம்ஆர் விஞ்ஞானியுமான பிரதீப் கவுர் தனது டுவிட்டர் பதிவில், "அடுத்த மே மாதம் மத்தியில் தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 19,000ஐ எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
"கிருமித் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றினால் மட்டுமே இதன் போக்கை மாற்றமுடியும்," என்று அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, "கொரோனா தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி அடைந்து விட்டன. முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி போடுவது ஆகிய மூன்றும்தான் நம்மைக் காக்கும் ஆயுதங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள்," என்று பிரதீப் கவுர் அறிவுறுத்தி இருப்ப தாகவும் தமிழ் சமயம் ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறுகையில், "நோய்த்தொற்றைக் குறைப்பதற்குக் கண்டறிதல், பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள்தான் சரியானவை. குறிப்பாக, இத்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பரிசோதனை களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்," என்று வலி யுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கிருமி பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
"சென்னையில் நான்கு நாட்கள் தொடர்ந்து மக்கள் எல்லாரும் முகக்கவசம் அணிந்தாலே பாதிப்பு குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் தொற்று உயர்ந்து கொண்டுதான் செல்லும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
"சென்னையில் இறுதிச் சடங்கு, மதம் சார்ந்த கூட்டங்கள், திருமணங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதாலேயே தொற்று அதிகமாகப் பரவுகிறது. இது ஒரு இக்கட்டான காலகட்டம் என்பதால் இவற்றில் பங்கேற்பதை தவிர்க்கவேண்டும். மக்கள் முகக்கவசம் அணியவேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

