சென்னை: கொவிட்-19 கிருமிப் பரவலின் இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருவதை அடுத்து, தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல்முறையாக இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு நடப்புக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் பயணம் மேற்கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதைத் தடுத்தால்தான் கிருமிப்பரவலை ஒரு கட்டுக்குள் கொண்டு வரமுடி யும் என்பதைக் கருத்தில் கொண்டே அரசு இதுபோல் ஊரடங்கு உத்தரவு களைப் பிறப்பித்து வருகிறது.
கடந்த 20ஆம் தேதி கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறு தோறும் முழு ஊடரங்கும் மற்ற நாள்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் அத்தியாவசியத் தேவைகளான மருந்து, பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், அவசர சிகிச்சை வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், வாரச் சந்தைகள், காய்கறிக் கடைகள், மதுக்கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், பேரங்காடிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்று மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கை மீறும் வகையில் பொறுப்பற்று நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கை கண்காணிப்பதற்காக 250க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வும் மாலைமலர் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இன்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், 16 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

