சென்னை: தேசியக் கல்விக் கொள்கை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்கொள்கை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் அம்சங்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டன.
இதையடுத்து பிற மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது.
அதன்படி அசாமி, பெங்காலி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட 17 மொழிகளில் கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின.
ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களுக்குத் தமிழகத்தில் ஒருதரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அக்கொள்கை அம்சங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதில் மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் மத்திய அரசு அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழைப் புறக்கணிக்கும் பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கைக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாநில உரிமை, மொழி உணர்வு, மாணவர் எதிர்காலம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் திமுக எப்போதும் உறுதியாக உள்ளது எனக் கூறிஉள்ளார்.

